காங்கிரஸ் கட்சி சார்பில், கையோடு கைகோர்ப்போம், அரசியலமைப்பை பாதுகாப்போம் எனும் பரப்புரை நிகழ்ச்சிக்கான மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடந்தது. இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பேசியதாவது: இடைத்தேர்தல் வேட்பாளராக என்னை நிறுத்துவதற்கு அழகிரியும் மற்றவர்களும் பரிந்துரை செய்தனர். வேண்டாம் என்று நினைத்தாலும் மேலிடம் சொன்னால் தட்டமுடியாது. காரணம், மேலிடத்துக்கு அடிபணிந்து நிற்கும் தொண்டன் நான். காங்கிரஸ் கட்சியில் எம்பி, எம்எல்ஏ, ஒன்றிய அமைச்சர் மற்றும் இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை உருவாக்கியவர் சோனியாகாந்தி. எனவே, ராகுல்காந்தி, கார்கே, அழகிரி ஆகியோர் என்னை வேட்பாளராக போட்டியிட ஆணையிட்டுள்ளனர். கட்சியின் நம்பிக்கையை வீணாக்காமல் காப்பாற்றுவேன். மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் சார்பில் பெற்றுத்தருவோம். ராகுலின் நடைபயணம் பாஜகவை தோல்வியடைய செய்யும். மோடியை நாட்டைவிட்டு வெளியேற்றும். மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பிப்பார்க்க ராகுல்தான் காரணம். தமிழ்நாட்டில் இருந்து நடைபயணம் தொடங்கியது அதன் சிறப்பாகும். எனவே, அந்த பயணத்தின் சிறப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்வது நமது கடமை. வரும் காலத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அதன்மூலம், ராகுல்காந்தி பிரதமராக வருவார்.இவ்வாறு அவர் பேசினார்.