திருவனந்தபுரம்: சபரிமலையில் மலை போல் குவிந்து கிடைக்கும் நாணயங்களை எண்ணும் பணியில் 700 ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும் அனைத்தையும் எண்ணி முடிக்க குறைந்தது 2 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. சபரிமலையில் கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். இந்த சீசனில் இதுவரை கிடைத்த மொத்த வருமானம் ரூ.330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் வரலாற்றில் இது மிக அதிக வருமானம் ஆகும். ஆனால் இதுவரை நாணயங்கள் எண்ணி முடிக்கப்படவில்லை. சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபத்தில் நாணயங்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் நாணயங்களை எண்ணுவதற்காக கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் உண்டியலில் நாணயங்கள் குவிந்ததை தொடர்ந்து அவை முழுவதையும் எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாணயங்களை எண்ணுவதற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 700 ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை போல் குவிந்து கிடக்கும் நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. இனியும் எண்ண வேண்டிய நாணயங்களின் மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.