புதுடெல்லி: டெல்லியில் டிஐஜிக்கள் மற்றும் ஐஜிக்கள் என 350 அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதிய 5ஜி நெட்வொர்க் குறித்த கட்டுரை சமர்பிக்கப்பட்டது. இந்த கட்டுரையில், ‘‘5 ஜி நெட்வொர்க் சேவை எளிதாக அணுகக்கூடியது மற்றும் திறந்த இணைய நெறிமுறைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடியது மற்றும் முழுபாதுகாப்பையும் சமரசம் செய்கிறது. போதைப்பொருள் போன்ற குற்றங்களுக்கான இணைப்புக்களை உருவாக்குவதற்கு இடைத்தரகர்கள் மற்றும் மனித உறுப்புக்கள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் பணமோசடி, தீவிரவாதத்துக்கு நிதியளித்தல் போன்றவற்றுக்கு 5ஜி நெட்வொர்க் உதவும். அரசு தொடர்பான முக்கியமான தகவல் தொடர்புகள், ராணுவ பயன்பாட்டுக்கும் தனியாக ஒரு 5ஜி நெட்வொர்க் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய உபகரணங்களை முன்கூட்டியே உருவாக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.