சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலைய துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அறநிறுவனங்களில் செலவு மேற்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக காசோலைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நடைமுறையை பின்பற்றாமல் கோயில் பணியாளர்கள் பெயரில் காசோலைகள் வழங்கப்பட்டு அதில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செலவினத்தின் உண்மை தன்மையை அறிய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்யும் வகையில் கோயில் மூலம் மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான தொகையினை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காசோலை மூலம் வழங்கும் நடைமுறையை கைவிட்டு, ரியல் டைம் கிராஸ் செட்டில்மன்ட் (ஆர்.டி.ஜி.எஸ்) மற்றும் தேசிய மின்வழி நிதி மாற்றம் (என்.இ.எப்.டி) மூலம் மட்டுமே வழங்க வேண்டும். இந்த அறிவிப்பிற்கு பின்னால் காசோலை மூலம் தொகை வழங்குவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.