×

தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்; ஆர்எஸ்எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
 இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், ரவி ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைகு உகந்தது தான். பி.எப்.ஐ., அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த  அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று அனுமதி மறுக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆகியோர் ஆஜராகி அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை அறிக்கையாக தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அணிவகுப்பு நடத்தப்படாது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்த நிலையில் இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும்.

500 இடங்களில் போராட்டங்களுக்கு தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்தும், பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்னும்,  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டுள்ளனர்.

 எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்கு தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல.

Tags : Tamil Nadu ,Peace Park ,RSS , Steps to continue Tamil Nadu as Peace Park: n State's argument in High Courtn Judgment in RSS case adjourned
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...