தாம்பரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு தினமும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம் வங்க, புதுப்பிக்க, ஆர்.சி புத்தகங்கள் பெற்று செல்ல, புதிய வாகனங்களை பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
சிலருக்கு கண் கண்ணாடி அணிய வேண்டும் என்பது குறித்தும், மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதில் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், பள்ளி வாகன டிரைவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களும் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வும், உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என அறிவுரையும் வழங்கப்பட்டது.