சென்னை: தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற தனியார் பள்ளி மாணவிகள், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் புரூக் பீல்டு இன்டர்நேஷனல் பள்ளியில், தேசிய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி ஜன.14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் திருநெல்வேலி பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அஜி 14 வயதிற்கு உட்பட்ட தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் வர்ஷினி, வினிஷா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி சக்தி காயத்ரி ஆகியோர் போட்டியில் ஏழாம் இடம் பெற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து பரிசு பெற்ற ஒரே மாணவி அஜி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிகளை பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் மற்றும் சதுரங்க பயிற்சியாளர் செல்வ மணிகண்டன் உடனிருந்தனர்.
