புதுடெல்லி: பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் நேரில் ஆஜராவதில் இருந்து டெல்லி நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி முதல் நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் நீட்டித்து வருகிறது. இந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை கூடுதல் செசன்ஸ் நீதிபதி சைலேந்தர் மாலிக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் தினமும் நேரில் ஆஜர்ஆவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையில் துபாய் சென்று தனது உறவினர்களை சந்திக்க அனுமதி கோரி நடிகை ஜாக்குலின் தாக்கல் செய்த மனு மீதான வாதம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.