சென்னை: கேரளாவில் உள்ள பெரியார் நினைவு இல்லத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கோட்டயத்தில் உள்ள வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் 70 சென்ட் பரப்பளவில் நினைவக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘பெரியார் இந்த மண்ணுக்கு வந்து போராடியது, அடுத்த 2024ம் ஆண்டுடன் 100 ஆண்டு காலம் முடிவடைகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் தமிழ்நாடு முதலமைச்சர், தற்போதைய நினைவக நிலை குறித்தும், இங்கு என்ன புனரமைக்கலாமா, புதுப்பிக்கலாமா, புதியதாக கட்டலாமா என்பது குறித்தும் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் நேற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கே இருக்கிற நிலைகள் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.