×

சில்லிபாயிண்ட்

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் மணமக்கள்.

* இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன்  சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, குத்துச் சண்டை  வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று அறிவித்த ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘ விசாரணை  முடியும் வரை சரண்சிங்கின் சொந்த ஊரில் நடக்கும் பயிற்சி முகாம் உட்பட  கூட்டமைப்பின் எல்லா நடவடிக்கை களையும் நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்று  கூறியுள்ளார்.

* மகளிர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்கள் விவரங்களை  நேற்று முதல் சமர்பிக்க தொடங்கியுள்ளன. ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி  என ஐபிஎல் அணிகள் தங்கள் ஏல விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.  விண்ணப்பங்களை வாங்கியுள்ள அதானி, செட்டிநாடு, ஜேகே சிமென்ட், ஏடபிள்யூஎல் அப்பல்லோ என ஐபிஎல் சாராத நிறுவனங்களும் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளன. இறுதிப் பட்டியல் இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி), 2022ம் ஆண்டுக்கான  கனவு டி20 அணியை அறிவித்துள்ளது. அதில் இந்திய வீரர்கள் கோஹ்லி, சூரியகுமார், ஹர்திக் என 3பேர் இடம் பெற்றுள்ளனர். ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து) கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில்  முகமது ரிஸ்வான்(பாக்), கிளென் பிலிப்ஸ்(நியூசிலாந்து),  சிக்கந்தர் ராசா(ஜிம்பாப்வே),  சாம் கரன்(இங்கி),  வனிந்து ஹசரங்கா(இலங்கை), ஹரிஸ் ரவூப்(பாக்), ஜோஷ்வா லிட்டில்(அயர்லாந்து) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.  ஆனால் ஆஸி, தென் ஆப்ரிக்கா, வங்கம்,  ஆப்கான் முக்கியமாக மேற்கு இந்தியத்தீவுகள் அணியில் இருந்து யாரும் இடம் பெறவில்லை.

Tags : Sillypoint
× RELATED சில்லிபாயின்ட்...