×

கேடு கெட்ட வெட்கம் இல்லாத எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது: அமைச்சர் உதயநிதி பேச்சு

பெரம்பூர்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள் என்றும் கேடுகெட்ட, வெட்கம் இல்லாத எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில், 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரிலான திருமண மண்டபத்தை திறந்துவைத்ததுடன் 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இதன்பின்னர் அமைச்சர் உதயநிதி பேசியதாவது; ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் திருமண மண்டபம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி வரிசையில்  சட்டமன்ற உறுப்பினராக கடந்தமுறை ரவிச்சந்திரன் இருந்தாலும் ஏராளமான திட்டங்களை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செய்திருக்கிறார். நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும்பணி தொடங்கப்பட உள்ளது.

மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஏறச் சென்றார்கள். அப்போது நான், ‘’ என் காரில் ஏறினாலும் பரவாயில்லை, கமலாலயத்துக்கு மட்டும் சென்று விடாதீர்கள்’’ என்று சொன்னேன்.

ஆனால் சட்டமன்றத்தில், ‘’எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது’’ என்று அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். கேடு கெட்ட, வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இதற்கு மேல் நான் அவர்களை பற்றி இந்த திருமண நிகழ்ச்சியில் பேச விரும்பவில்லை.
இவ்வாறு உதயநிதி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : minister ,udayanidhi , AIADMK is a shameless opposition party: Minister Udayanidhi's speech
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...