×

இந்தூரில் நாளை கடைசி ஒருநாள் போட்டி; வெற்றியுடன் நம்பர் 1 இடம் பிடிக்க இந்தியா ஆயத்தம்

இந்தூர்: இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் அசத்திய நிலையில், 2வது போட்டியில் பவுலர்கள் மிரட்டினர். சுப்மன்கில் சூப்பர் பார்மில் உள்ளார். ரோகித்சர்மா, கோஹ்லி, சூர்யா, பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் சிராஜ் மிரட்டி வருகிறார். தொடரை கைப்பற்றிவிட்டதால் நாளை சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

சிராஜ், அல்லது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஷாபாஸ் அகமது, சாஹல் காத்திருக்கின்றனர். நாளையும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களம் இறங்கும். மறுபுறம் நியூசிலாந்து முதல் போட்டியில் கடைசி வரை போராடிய நிலையில், 2வது போட்டியில் பேட்டிங்கில் நிலைகுலைந்தது. நாளை ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. காயத்தில் இருந்து மீண்டால், இஷ் சோதி ஆட வாய்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும் நாளை ஒரு நாள் கிரிக்கெட்டில் 116வது முறை சந்திக்க உள்ளன. இதற்கு முன் மோதிய 115 போட்டிகளில் இந்தியா 57, நியூசிலாந்து 50 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி ரத்தாகி உள்ளது. நம்பர் 1 இடம்: ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் தற்போது இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இந்தியா இதே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும்.

மேலும் டி.20 தரவரிசையிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நாளை வென்றால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் இரண்டிலும் முதல் இடம் பிடித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தும். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

ராசியான மைதானம்
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு இதுவரை இந்தியா (இங்கிலாந்துக்கு எதிராக 2, ஆஸி, தெ.ஆ, வெ.இண்டீசுக்கு எதிராக தலா 1) 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 3, சேசிங்கில் இரண்டில் வென்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா 2011ல் 418/5 ரன் குவித்தது தான் அதிகபட்சம். அந்த போட்டியில் சேவாக் இரட்டைசதம் (219ரன்) விளாசினார்.

Tags : ODI ,Indore ,India , Last ODI tomorrow in Indore; India is all set to grab the No. 1 spot with a win
× RELATED சிறுகதை