செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் அருகே கீழகழனி, மலைவையாவூர், பழவேரி, இளநகர், ஆப்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூமிக்கு அடியே பல்வேறு பணிகளக்காக பள்ளம் தோண்டியபோது, ஏராளமான முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல்வேறு அரியவகை பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, செங்கல்பட்டு அருகே பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள பாலூர் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் சமுதாயம் குறித்து பல்வேறு அரியவகை சான்றுகள் புதையுண்டு கிடக்கின்றன.
பாலூர் கிராமத்தை ஒட்டிய பாலாற்றங்கரைக்கு வடக்கே வெங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம், வெண்பாக்கம், குருவன்மேடு, தாசரிகுன்னத்தூர் என வட்ட வடிவில் அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் மக்கள் வசித்ததை நிரூபிக்கும் வகையில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆதிச்சநல்லூரில் காணப்படும் அதே வகையிலான அரிய வகை இடுகாடு காணப்படுகிறது. தற்போது இப்பகுதிகளை பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியே புதைந்து கிடக்கும் அரியவகை தொல்பொருட்களை மீட்டெடுத்து, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.