×

பொது கழிப்பறைகளின் வசதிகள் குறித்து QR Code மூலம் பொதுமக்கள் கருத்து விழிப்புணர்வு

சென்னை: நகர்ப்புர உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் வசதிகள் குறித்து QR Code மூலம்  பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பது தொடர்பாக  விழிப்புணர்வு ஏற்படுத்துதல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களையும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நகரங்களாக மாற்றுவது அரசின் முதன்மையான குறிக்கோளாகும்.

தமிழ்நாட்டில் உள்ள  நகரங்களில்,  பொது மற்றும் வணிகம் சார்ந்த இடங்களில்,  தமிழ்நாடு அரசின் பங்களிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7,898 சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் 2,771  பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் சுகாதார வசதிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான அரசின் முதன்மை  முயற்சியாகும்.

அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாயக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அக்கழிப்பறைகள் குறித்து  பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொரு கழிப்பறைக்கும் QR Code  உருவாக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட  கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறைகளில் உள்ள QR Code-ஐ ஸ்கேனிங் செய்து பின்வரும் விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தெரிந்துகொள்ளலாம்:

* கழிப்பறை அமைந்துள்ள இடம் மற்றும் முகவரி
* அலைபேசி எண் பதிவு செய்யும் முறை
* தண்ணீர் வசதி முறையாக உள்ளதா? (ஆம்/இல்லை)
* கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா? (ஆம்/இல்லை)
* கழிப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளதா? (ஆம்/இல்லை)
* தனிப்பட்ட கருத்து பதிவு செய்யும் முறை
* கருத்து அல்லது புகார் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முறை
* இறுதியாக சமர்ப்பித்தல் (Submit)
இந்த QR Code  விவரம் அடங்கிய சிறு அட்டை, அனைத்து பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளில் பொருத்தப்படவேண்டும் என திட்டமிடப்பட்டதன் முன்னோடியாக, இதுவரை 7,954 கழிப்பறைகளில் QR Code  பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,715 கழிப்பறைகளில் QR Code பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இக்கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்களது கைப்பேசியில் QR Code ஐ ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை QR Code அட்டைகள் பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிப்பறைகள் தொடர்பாக 1,25,906 பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.

பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மற்றும் புகார்கள், சம்மந்தப்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக கழிவறைகளின் பராமரிப்பு மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிவறை வசதிகள்  கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  
 
QR Code-ஐ பொதுமக்கள் பயன்படுத்தும் முறை.

* பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் QR Code பலகைகளை பயன்படுத்தி பொதுமக்கள் தெரிவிக்கும்  கருத்துக்களின் மூலம் பின்வரும் பயன்களைப் பெறமுடியும்:
* பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளின் நிலை குறித்து நகர்ப்புர உள்ளாட்சிகள் உடனுக்குடன் தகவல் பெறுகின்றன .
* இதன் மூலம் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளில் ஏற்படும் பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.
* பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யப்படுகின்றன.
* கழிப்பறைகளின் வசதிகளை  மேம்படுத்துவதற்கு நகர்ப்புர உள்ளாட்சிகள் திட்டமிட்டு செயல்பட உதவுகிறது.
* பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்தமான சுகாதாரமான கழிப்பறைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது. எனவே, QR Code மூலம் நகர்ப்புர உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளின் நிலையைத் தெரிவித்து, அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைப்பதை உறுதி செய்ய உதவிடுமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Awareness of public opinion about the facilities of public toilets through QR Code
× RELATED மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும்...