ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதிகளில் இரட்டைமடி வலையில் மீன்பிடித்து திரும்பிய 48 விசைப்படகுகள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். நான்கு டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றன.
இரவு முழுவதும் மீன்பிடித்து திரும்பிய படகுகளில் அதிகளவில் மீன்பாடு இருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையால் மீன்பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்ததால், நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய படகுகளில் மீன்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையால் மீன்பிடித்து திரும்பிய ராமேஸ்வரம், பாம்பனை சேர்ந்த 48 விசைப்படகுகள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். நான்கு டன் மீன்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டதில் ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
மேலும் நேற்று முன்தினம் கடலுக்கு சென்று தடை செய்யப்பட்ட வலையால் மீன்பிடித்து கரை திரும்பிய படகுகளில், மீன்பிடி அனுமதி டோக்கன் பெறாமல் சென்ற 49 விசைப்படகுகள் மீதும் மீன்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.