×

காதலில் தோல்வி அடைந்த காதலன்-காதலியை சேர்த்து வைக்கும் ‘செயலி’ மூலம் ரூ.40 சவரன் அபேஸ்: பஞ்சாப் வாலிபர்கள் 2 பேர் கைது

சென்னை: காதலில் தோல்வி அடைந்தவர்களை சேர்த்து வைக்கும் செயலி (ஆப்) மூலம் இளம் பெண்ணிடம் தகவல்களை பெற்றும், 40 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிய 2 பஞ்சாப் மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் காதலில், தோல்வி அடைந்தார். இந்நிலையில், அவரது கண்ணில் ‘ஹவ் டு பிரிங் பேக் எக்ஸ்’ என்ற செயலி பட்டது. இந்த செயலியானது, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவிசெய்து மீண்டும் சேர்த்து வைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றியே விவரங்களை அளித்தார்.

இதையடுத்து இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட அந்த பெண்ணை 2 பேர் தொடர்பு கொண்டனர். இளைஞர்கள் கூறியபடி, அந்த பெண்ணும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு இருந்த 2 இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால், பணம் அதிகமாக செலவாகும். உங்களிடம் பணம் இல்லையென்றால் நகை இருந்தாலும் வாங்கி சர்வீஸ் செய்கிறோம் என்று கூறினர். இதை நம்பிய இளம்பெண் காதலன் மீது இருந்த காதல் காரணமாக, தான் எடுத்து வந்த 40 சவரன் நகைகளை, அந்த 2 இளைஞர்களிடம் அளித்தார். தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த 2 இளைஞர்கள் கூறியபடி காதலனை, பெண்ணிடம் சேர்த்து வைக்கவில்லை.

ஆனால், அந்த இளைஞர்கள், நீ கொடுத்த நகைகள் போதாது, மேலும் ரூ. 5 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்தி பரப்புவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பதறிப் போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.  அதன் பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

எனவே, போலீசார் அந்த இளம் பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ளச் செய்தனர்.  அந்த இளம் பெண் அந்த இளைஞர்களிடம், ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்று கூறும்படி செய்தனர். அந்த இளைஞர்களும் சென்னை வருவதாக கூறினார். அந்த இளைஞர்கள் இருவரும்  விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தனர். போலீசார்  சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர்.

அதோடு சாதாரண உடை அணிந்த போலீசார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இளம் பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோஷத்தில் பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் வந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி  வளைத்து பிடித்து கைது செய்தனர்.  அவர்களை சென்னை விமான நிலைய காவல்  நிலையம் கொண்டு சென்றனர்.
விசாரணையில்,   இதைப்போல் இந்த போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதை அடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூ.8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.  விமான நிலைய போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.


Tags : Savaran Abes , Failed in love, app, Rs.40 Savaran Abbeys, Punjab youth, 2 arrested
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...