அவனியபுரம்: ‘ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை’ என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை திமுக அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. தந்தை பெரியாரின் மண்ணில், திராவிட இயக்க பூமியில் பாஜ கட்சியினுடைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
அவர்கள் கோடிக்கணக்கிலே பணம் செலவழிக்கலாம். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது. இன்று வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டு வருகின்ற என்னுடைய ஆருயிர் சகோதரர் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக, அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை கண்டுபிடித்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.