×

குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு?; எலி பேஸ்ட் கொடுத்து இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிருக்கு போராடும் தாய்: பர்கூர் அருகே பரிதாபம்

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கவுரி (26). இவரும் கெட்டூரை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ் என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு ஜீவன்(4) என்ற மகனும் பாவனா(2) என்ற மகளும் இருந்தனர். முத்துராஜ் கடந்த ஒருமாதமாக சரிவர வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கணவனிடம் கோபித்து கொண்ட கவுரி, செந்தாரப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இந்தநிலையில், தொடர்ந்து நடக்கும் பிரச்னையால் விரக்தியடைந்த கவுரி, தற்கொலை செய்ய முடிவு செய்ததுடன் தான் இறந்துவிட்டால் குழந்தைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்று கருதினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது 2 குழந்தைகளுக்கும் எலிபேஸ்ட் கொடுத்துவிட்டு தானும் அதை சாப்பிட்டுள்ளார். இதன்பிறகு சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மூவரும் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குழந்தைகள் ஜீவன், பாவனா ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கவுரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கவுரி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் கீழ் கணவர் முத்துராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 17ம்தேதி இரவு முத்துராஜ், மாமியாரின் வீட்டிற்கு சென்று கவுரியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு கவுரி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராஜ், தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக விரக்தியில் இருந்த கவுரி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்றாரா என்று விசாரணை நடத்துகின்றனர். விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Barkur , A tragic end to a family problem?; Mother fights for life after killing two children by giving them rat paste: Pathetic near Barkur
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு