சென்னை: பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார்.
இந்த விழாவிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதிய தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர். அதேபோன்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் நிதி வழங்கினர்.
