சென்னை: ஏழு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றம் செய்தது மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு உள்ளான, அரியலூரை சேர்ந்த 7 பேரை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் அடைக்க ஏப்ரல் மாதம் அரியலூர் ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து ஏழு பேர் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஏழு பேரும் சிறை உத்தரவை பெற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசின் வாதம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல, மேலும் உத்தரவு நகலை அவர்கள் பெற மறுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.