×

குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள் அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் கட்டணம், வரியை செலுத்த வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள் அதற்கான வரி மற்றும் கட்டணங்களை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் ஆண்டு மதிப்பில் 7 சதவீதம் சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டு, ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 சதவீதம் பிரித்து வசூலிக்கப்படுகிறது. குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி சொத்து வரியின் ஒரு பகுதியாகும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள் இந்த  வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும்.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும்.  குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் மேற்குறிப்பிட்ட குடிநீர் வரி/கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும் செலுத்திட வேண்டும். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் நிலுவை இருப்பின், அதை உடனடியாக செலுத்திட வேண்டும். அவ்வாறு, செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லையெனில் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா   சொத்து வாரிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் வருவாய் வசூல் சட்டம் ஆகியவற்றின் கீழ்  ஜப்தி செய்யப்படும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும். பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாகவும் வரி மற்றும் கட்டணங்களை நுகர்வோர் செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Drinking Water Board , Those who have drinking water and sewerage connection must pay the fees and taxes within the first 15 days of the half-year: Chennai Water Board Notification
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...