×

மீண்டும் ஹீரோவானார் கவுண்டமணி

சென்னை: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கவுண்டமணி, இதற்கு முன்பு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த 2015ல் வெளியான ‘49 ஓ’, 2016ல் ரிலீசான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். பிறகு ‘வாய்மை’ படத்தில் வழக்கமான காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில், 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்கும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்ற படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இப்படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை செல்வம், மணவை ஆர்.புவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோருடன் ராதாரவி, சித்ரா லட்சுமணன், டி.சிவா, மனோபாலா, ஜே.சதீஷ் குமார், நந்தகோபால், ஆர்.கே.சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார் ஆகிய 11 தயாரிப்பாளர்கள் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. வைரமுத்து பாடல்கள் எழுத, வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார். இவர், ஏற்கனவே கவுண்டமணி நடித்த ‘49 ஓ’ என்ற படத்துக்கு இசை அமைத்திருந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படக் கல்லூரி மாணவர் செல்வ அன்பரசன் இயக்குகிறார். இதற்கு முன்பு இவர், ‘பேய காணோம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Tags : Kaundamani , Kaundamani became a hero again
× RELATED கவுண்டமணி, யோகி பாபு இணைந்த ஒத்த ஓட்டு முத்தையா