சுக்மா: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கண்ணிவெடிக்கு குழி தோண்டிய 6 நக்சல்களை கூட்டு அதிரடிப்படை கைது செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் பொலம்பள்ளி வனப்பகுதியில் பதுங்கியிருந்த மூன்று நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் அதிரடியாக கைது செய்தனர். தொடர் தேடுதல் வேட்டையின் மூலம் பஸ்தார், சுக்மா பிரிவில் மொத்தம் 6 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நக்சல் தடுப்பு மூத்த அதிகாரி கூறுகையில், ‘மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எலைட் பிரிவு கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) கூட்டு நடவடிக்கையின் மூலம் டோர்னபால் மற்றும் பொலமப்பள்ளி வனப்பகுதியில் தீவிர ேதடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
குறிப்பிட்ட இடத்தில் கண்ணிவெடி வைப்பதற்காக நக்சல்கள் குழிகளை தோண்டிக் கொண்டிருந்த ேபாது, அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். படேபரா ஆர்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று நச்சல்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முச்சாகி என்பவன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தோம். தற்போது அவனும் சிக்கிவிட்டான். அவர்களிடம் இருந்து டிஃபின் வெடிகுண்டு, ஐந்து ஜெலட்டின் குச்சிகள், கார்டெக்ஸ் கம்பி, மின்சாரம் அல்லாத 6 டெட்டனேட்டர்கள், பேட்டரிகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் ஐடெனார் கிராமத்தில் மேலும் மூன்று நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.