கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே நாய்கள் துரத்தி கடித்ததால் வீட்டிற்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியை சேர்ந்த செங்கமேடு கிராமம் கொடிக்கால்வெளி தெருவில் நேற்று அதிவேகமாக ஓடி வந்த 3 வயதான புள்ளி மானை, அந்த பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்தி, துரத்தி கடித்தன. இதனால் பயந்து போன புள்ளிமான், நாய்களிடமிருந்து தப்பித்து வேகமாக பாய்ந்து ஓடி கொடிகால்வெளி தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்குள் புகுந்தது. இதனை பக்குவமாக அங்குள்ளவர்கள் வீட்டுக்குள்ளே வைத்து பாதுகாத்தனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் கொடுத்த தகவலின் பேரில், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப்டேனியல் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயத்துடன் இருந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு சீர்காழியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் செல்லதுரை, மருத்துவ உதவி அளித்ததைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் அந்த புள்ளி மானை பாதுகாப்பாக கோடியக்கரையில் உள்ள சரணாலயத்தில் விட்டனர்.