×

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்: சட்டக்கல்லூரி

திருவனந்தபுரம்: கொச்சியில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கொச்சியில் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் இக்கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழாவுடன் இணைந்து தங்கம் மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகரும், பாடகருமான வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ஏறிய ஒரு மாணவர் அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்தார்.

அந்த சமயத்தில் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறி அவரது கையை பிடித்து இழுத்தார். மேலும் அவரது தோளிலும் அந்த மாணவர் கை போட முயன்றார். ஆனால் அபர்ணா பாலமுரளி அதற்கு சம்மதிக்காமல் நைசாக நழுவினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலில் தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் பின்னர் அபர்ணா பாலமுரளி கூறினார்.

இது குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையே நடந்த சம்பவத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பேரவை மன்னிப்பு கோரியது. இந்நிலையில் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவரை சட்டக் கல்லூரி முதல்வர் பிந்து ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவரிடம்  விளக்கம் கேட்டிருந்ததாகவும், விளக்கம் திருப்தி இல்லாததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பிந்து தெரிவித்தார்.

Tags : Law ,Aparna Balamurali , Law student suspended for violating actress Aparna Balamurali
× RELATED உ.பி. மதரஸா கல்வி சட்டம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு