கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேற்றிரவு வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை நகைக்காக 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கழுத்தை கத்தியால் சரமாரி அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே கொண்டமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (62). மூதாட்டியான இவர் ஓய்வூதிய வருமானத்தில், வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சுலோச்சனா வீட்டுக்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் உள்ளே புகுந்தது. பின்னர் சுலோச்சனா கழுத்தில் கத்தியை வைத்து, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினர். அதற்கு அவர், அவை அனைத்தும் கவரிங் நகைகள் என கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமான 4 பேர் கும்பல், மூதாட்டி சுலோச்சனாவை சரமாரி தாக்கி, அவரது கழுத்தை கத்தியால் சரமாரியாக அறுத்தனர். இதில் அவர் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் தப்பி சென்றது.
இதுகுறித்து தகவலறிந்ததும் பாதிரிவேடு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மூதாட்டி சுலோச்சனாவின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுலோச்சனாவின் வீட்டில் மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இக்கொலை பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.