உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உதவியாளர் துளசிதாஸின் தந்தை சம்பத் மறைவையொட்டி, நேற்று அவரது திருவுருவப் படத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை நகரின் பல்வேறு மால்களில் சர்வதேச அங்கீகாரம் இன்றி ரசாயனம் கலந்த பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பொம்மைகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்து, அதில் இருக்கும் ரசாயன பொருட்கள், எந்தெந்த நாடுகளில் இருந்து அந்த பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுகிறது போன்றவை குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு ரசாயனம் கலந்த பொம்மைகளை வாங்கி கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.