×

பழநி கோயிலை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.58 கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல்: பழநி கோயிலை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.58 கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு பெருவிழா வருகின்றன. 27.01.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (20.01.2023) உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் முடிவற்று கும்பாபிஷேகம் 27ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணிகளையும் நேரடி கண்காணிப்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ஏற்கனவே இருந்த கழிவறைகளை இடித்துவிட்டு புதிதாக 5 கழிவறைகளும், 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் புதிதாகவும் கட்டப்பட்ட வருகின்றன. அதேபோல் முருகப்பெருமானுக்கு வேள்வி நடத்துவதற்கு தேவையான சுமார் 90 அக்னி குண்டங்கள் மற்றும் யாகசாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள 6,000 நபர்களுக்கு சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்பட இருக்கின்றன. அதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களில் 2000 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வருகின்ற லட்சக்கணக்கான மக்களை ஒழுங்குபடுத்தவும், வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவற்றிற்கும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 4 தற்காலிக மருத்துவ மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடமுழுக்கு மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்ற அனைத்து பணிகள் குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நாளைய தினம் காணொலி வாயிலாக ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. குடமுழுக்கு பணிகளுக்காக துறையின் சார்பில் கூடுதலாக 5 இணை ஆணையாளர்கள், 5 துணை ஆணையாளர்கள், 10 உதவி ஆணையாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். குடமுழுக்கின் போது ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் மந்திரங்கள் ஒலிக்கும் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்  தமிழில் குடமுழுக்கு செய்யப்படும். 48 முதுநிலை திருக்கோயில்களிலும் பக்தி புத்தக விற்பனை நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த கட்டணத்தோடு 108 அரிய பக்தி புத்தகங்களும் விற்பனைக்கு அனுப்பப்படும். புத்தகத்தை வெளியிடுவது ஏதோ நேற்றைக்கு எடுத்த முடிவு அல்ல, ஓர் ஆண்டுக்கு முன்பு உயர்மட்ட குழுவிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்திலே எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓராண்டு கடுமையாக உழைத்து ஒரு வரலாற்றுச் சான்றாக அமைந்திருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் பதிப்பகத்துறையையும் மேம்படுத்தி, ஆணையர் அலுவலகத்தில் புத்தக விற்பனை கூடம், ஓலைச்சுவடிகள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். மேலும், வையாபுரி குளம் நீர்வளத்துறை சார்ந்த குளம் என்பதால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி ஒரு தீர்வு காணப்படும். அதோடு மட்டுமல்லாமல் பெருந்திட்ட வரைவிலே அந்த குளங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சுமார் 15 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் முதலமைச்சர் இத்திருக்கோயிலின் மேம்பாட்டு பணிகளுக்கு பெருந்திட்ட வரைவிற்காக ரூ.58 கோடி மதிப்பீட்டிலான 53 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த  அரசாணை வழங்கியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழனி திருக்கோயிலுக்கு இரண்டாவது ரோப் கார் அமைக்கும் திட்டப் பணிகள் ஆய்விலே இருக்கின்றன. குடமுழுக்கு விழா முடிவுற்ற பின் அதற்கான பணிகள் விரைப்படுத்தப்படும். பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் ரோப் கார் வசதி பெருந்திட்ட வரைவிலே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதற்குண்டான சாத்திய கூறுகள் இருப்பதாக வல்லுநர் குழு அறிக்கை தந்து இருக்கின்றது. முதலமைச்சர் சொல்வது எதுவாக இருந்தாலும் அதை செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல சொல்லிய திட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்கின்ற ஒரு முதல்வர் ஒன்றிய கண்டத்தில் இருக்கிறார் என்றால் அது முதல்வராக தான் இருக்க முடியும்.

அந்த வகையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவித்த அறிவிப்புகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் 300 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தோம். அந்த பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 80 ஆயிரம் சதுர அடிக்கு திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒட்டு மொத்தமாக 2 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடிக்கு பணிகள் நடைபெற இருக்கின்றன.  பழனி திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் அனைவரும் குடமுழுக்கு நிகழ்வுகளை  காணுகின்ற வகையில் எல் இ டி திரைகள் 16 இடங்களில் பொருத்தப்படவுள்ளன. குடமுமுழுக்கின்போது கலசங்களுக்கு முதல்முறையாக வானத்திலிருந்து பூ தூவுகின்ற ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர்  வி.லதா, பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவசக்தி, திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கே.எம். சுப்பிரமணியன், ச.மணிமாறன், ரா.ராஜசேகரன், கே சத்யா, திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் என் நடராஜன் துணை ஆணையர் இரா.பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Palani Temple ,Minister ,Segarbabu , Lands worth Rs 58 crore acquired for Palani temple development: Minister Shekharbabu informs
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...