சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகர் பகுதியின் நடுவில் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆர்ச் வடிவ பாலம் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1987 ஆம் ஆண்டு பழைய ஆற்று பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு தற்போது போக்குவரத்து புதிய பாலத்தில் நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் கூடுதலாக ஒரு புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர்.
பழைய ஆற்றுப் பாலத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.11.77 கோடி செலவில் புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணி தொடங்குவதற்காக பழைய பவானி ஆற்றுப் பாலத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. நூறாண்டுகள் பழமை வாய்ந்த பவானி ஆற்று பாலத்தை பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பழைய பாலத்தை முழுவதுமாக இடித்த பின் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.