சென்னை: கஞ்சா போதையில் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ரவுடி கும்பல் ஒன்று அடித்து உடைத்தனர். அதை தடுக்க முயன்ற காவலரை தாக்க முயன்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரவுடி கும்பல் ஒன்று கஞ்சா போதையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வாகனங்களை அடித்து உடைத்த ரவுடி கும்பலை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது காவலர் பாலாஜியை ரவுடி கும்பல் தாக்க முயற்சி செய்தது. இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு ரவுடி கும்பலை விடாமல் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். அதில், ரவுடி கும்பலை சேர்ந்த அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (25), ஜெயராஜ் (22) ஆகியோரை மட்டும் கைது செய்தனர். தப்பி ஓடிய ரவுடி கும்பலை சிசிடிவி பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.