சென்னை: உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் டாவோஸில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் 2023ல் தமிழ்நாடு முன்பை விடவும் பெருமளவில் கலந்து கொண்டது. தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ப்ரோமனேட் 73ல் உள்ள தமிழ்நாடு அரங்கை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு உலக முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டனர். 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள சூழ்நிலையில், இவ்வாறான உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு, நம் மாநிலத்தின் முதலீட்டு சூழ்நிலையினை பரவலாக பிரகடனப்படுத்துவது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பெருமளவில் முதலீட்டாளர்களின் வரவை அதிகரித்திடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.