சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பள்ளி மாணவர்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் தமிழ்நாடு உள்ளது . அதே சமயத்தில், அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்திருப்பது ஓர் ஆறுதலான விஷயம். தொடக்கக் கல்வி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் களைய முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே, வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.