விழுப்புரம்: 2 ஆண்டு இடைவெளிக்குப்பின் இன்று ஆற்றுத்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழர்களின் முக்கியபண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை விழா ஒருவாரம் கொண்டாடப்படும். போகிப்பண்டிகையில் துவங்கி பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என்ற வரிசையில் 5வது நாளில் ஆற்றுத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆற்றுத்திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
இதையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் அங்கு கூடுவார்கள். சிறுவர்கள் விளையாடுவதற்கு ராட்டினம், ஊஞ்சல் மற்றும் விளையாட்டுப்பொருட்கள் விற்பனை, விவசாயிகள் விளைவிக்கும் சிறுவள்ளிக்கிழங்கு, பன்னீர்கரும்புகள் விற்பனையும் நடைபெறும். சிறுவியாபாரிகளுக்கு அன்று லட்சக்கணக்கில் வியாபாரமும் நடைபெறும். குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றுத்திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின்னர் இன்று ஆற்றுத்திருவிழா நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூர், மணம்பூண்டி, ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளிலும் இத்திருவிழா நடைபெறுகிறது. ஆற்றுத்திருவிழாவையொட்டி எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரில் ஏற்பாடுகள் தீவிரம்
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் எல்லைகளை இணைக்கும் இடத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தை 5ம் நாள் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் வீரபாண்டி, வேட்டவலம், கீழையூர் சிவன், இரட்டைவிநாயகர் ஆலயங்களில் இருந்துவரும் சுவாமிகள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் கடைகள் அமைக்க வியபாரிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் டிஎஸ்பி பழனி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.