×

மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய பெங்களூரு பள்ளி மாணவி பலி: சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த மச்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணிகிருஷ்ணா. இவர், தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் மதுராந்தகம் அடுத்த ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தார். பின்னர், தரிசனம் முடித்து விட்டு, நேற்று காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தார். கடலில் குளிக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரது மகள் சுமிதா (15), ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டாள். அக்கம்-பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் சுமிதா தண்ணீரில் மூழ்கி விட்டாள்.

இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் சண்முகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மாமல்லபுரம் போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் ஆகியோர் படகு மூலம் கடலுக்கு சென்று தேடியபோது சுமிதா சடலமாக மீட்கப்பட்டாள். இதையடுத்து, சுமிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மாமல்லபுரம் எஸ்ஐ விஜயகுமார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.



Tags : Mamallapuram , Mamallapuram, Kadal, Raksatha Alai, Sikki, school girl killed
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ