×

வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக பட்டா மாறுதல் செய்ய புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் மனைப்பிரிவை சார்ந்தவை. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து பட்டா மாறுதல் செய்ய புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்பட்டு, மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கலாம்.

புதிய மென்பொருள் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும். மேலும், தனித்தனியே பொதுமக்கள் அந்த மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை இல்லை.  மேலும், சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இதனால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. இதனால், பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை விற்கும் மோசடி தடுக்கப்படும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் வருவாய் கிராமங்கள் நகரமயமாதலுக்கு பின்னர் நகர்ப்புற தன்மையை அடைவதை தொடர்ந்து நகரளவை பணி மேற்கொள்ளப்படும். இப்பணி மிகுந்த காலதாமதம் ஆவதன் காரணமாக குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்களை பெறுவதில் சிரமத்தை அளித்து வந்த நிலையில், மேற்படி வருவாய் பின்தொடர் பணி, நகரநிலவரித்திட்ட பணியினை குறைந்த காலத்திற்குள் முடித்திட ஏதுவாக தேசிய தகவலியல் மையம் வாயிலாக தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருளை (https://tamilnilam.tn.gov.in) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வினய், தேசிய தகவலியல் மைய துணை தலைமை இயக்குநர் கீதாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

* பணிகள் விரைவில் முடியும்
புதிய மென்பொருளின் பயனாக, வருவாய் பின்தொடர் பணியில் கைமுறை செயலாக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த விசாரணை அறிவிப்பு தயார் செய்வதில் இருந்து இறுதி அசல் ஆவணங்கள் தயாரித்தல் வரையிலான பணிகள் மற்றும் சிட்டா நகல் தயாரித்தல் ஆகிய படி நிலைகள் கணினிமயமாக்கப்பட்டு பணிகளை விரைவில் முடித்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் மூலம் தயார் செய்யப்படும் இறுதி ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் கொண்டதாக அமைவதுடன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்தில் இருந்தே இப்பணிகளை நேரடியாக கண்காணிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வருவாய் பின்தொடர் பணி நடைபெற்று கொண்டிருக்கும் 9 மாநகராட்சிகள் மற்றும் 36 நகராட்சிகளின் நகர நிலவரித்திட்ட அலகுகளில் மேற்படி மென்பொருள் நிறுவப்படும். இதன்மூலம் நகர பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள் இணையதளம் மூலமாக விரைவில் கிடைக்கும்.


Tags : Chief Minister ,MK Stalin , Housing, Subdivision, Patta, New Software, Chief Minister, launched
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...