சென்னை: ஓபிஎஸ், ஜெயக்குமார் மகன்கள் மட்டும் நாடாளுமன்றத்துக்கு சென்று எம்பியாகலாம். ஆனால், உதயநிதியை வாரிசு அரசியல் என்று அவர்கள் சொல்வது சொத்தை தனமான வாதம் என்று கவிஞர் காசி முத்துமாணிக்கம் ஆவேசமாக பேசினார். பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கலைஞர் நகரில் நடைபெற்றது. திமுக பகுதிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது: தமிழ்நாட்டில் முருகனை ஒன்றிய அமைச்சராக்கிய பின்பே ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தாராபுரத்தில் முருகனை தோற்கடித்தவர் மாநில அமைச்சர் கயல்விழி செல்வராஜ். தோற்றவர் ஒன்றிய அமைச்சர். இது என்ன நியாயம்? தூத்துக்குடியில் வென்றவர் கனிமொழி எம்பி. தோற்றவர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் அவர் கவர்னர். மக்களால் தேர்ந்தெடுக்காமல் அமைச்சரான பிறகு சாவாகாசமாக மேலவை உறுப்பினராகவோ அல்லது இடைத்தேர்தல் மூலமாகவே வென்று வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதியை அமைச்சர் ஆக்கக் கூடாது என்று அவர்கள் சொல்வது தவறு.
உதயநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே அமைச்சராக தகுதி பெற்று விட்டார். வாரிசுகள் அரசியலில் இருக்கக் கூடாதா? ஓபிஎஸ் மகனும், ஜெயக்குமார் மகனும் நாடாளுமன்றத்துக்கு செல்லலாமா?. தந்தை அரசியலில் இருந்தால் மகன் அரசியலுக்கே வரக்கூடாதா?. முதலில் அவர் பிரச்சார நடிகர், இளைஞர் அணி, எம்எல்ஏ என விரிந்து இன்று அமைச்சராகி உள்ளார். எனவே, வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்பதெல்லாம் சொத்தை வாதம். உதயநிதி அமைச்சர் ஆனது, இதுவே கால தாமதம். இப்போதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவியை கொடுத்தாரே என ஒவ்வொரு தொண்டனும் மகிழ்கிறான். இவ்வாறு அவர் பேசினார்.