×

காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்

பென்னாகரம் : காணும் பொங்கல் விழாவையொட்டி, ஒகேனக்கலில் நேற்று வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசல்களில் உற்சாக சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கடந்த 14ம்தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது 15ம் தேதி பொங்கலும், 16ம்தேதி மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் விழாவையொட்டி, நேற்று ஒகேனக்கலில் வெளி மாநிலத்தவர்கள், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். டூவீலர், கார்கள், வேன் மற்றும் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகங்களில் கூட்டம் கூட்டமாக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நடைபாதை, தொங்குபாலம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. ஓட்டல்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்லுலாப் பயணிகள் ஆற்றில் பரிசல் சவாரி செய்து ஐந்தருவி, சினி பர்லஸ், வீயூ பாய்ண்ட் ெஜகன்மோகினி குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து, மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால், பஸ் ஸ்டாண்ட், அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் திட்டு, ஆலம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Pongal festival ,Ogenakal , Bennagaram: On the occasion of Kanum Pongal festival, tourists from foreign states and districts were with their families in Okanagan yesterday.
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...