உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே லிங்கப்பநாயக்கனூர் மலையடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலம் கொண்ட நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வீரன் ஒருவன் வலது கையில் வாள், இடது கையில் வளரி உள்ளது. அருகே வீரரின் துணைவி உள்ளார்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், ‘‘இந்த சிற்பத்தில் நேர்த்தியான உடை அலங்காரம் மற்றும் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பின்படி சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். வளரி என்ற ஆயுதம் தொன்மையானது. இது பூமராங் என்ற பெயரில் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் பரவலாக இன்று வரை இருந்து வருகிறது. இந்த வளரி தென் தமிழ்நாட்டில் அதிகமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இதன் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாகவும் அங்குள்ள அருங்காட்சியங்களில் இன்றளவும் வளரி ஆயுதம் இருப்பதை காணமுடிகிறது.ஆனால் மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட வளரியுடன் கூடிய நடுகற்கள், கருமாத்தூர், கோட்டைப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கருமாத்தூர் அருகில் உள்ள கோவிலாங்குளம் பகுதில் பொங்கல் அன்று வளரியை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது’’ என்றார்.