சென்னை: மெட்ரோ 5வது வழித்தடத்தில் சிஎம்பிடி முதல் மாதவரம் வரை 10 இடங்களில் உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும், 5 இடங்களில் சுரங்க ரயில் நிலையங்களும் அமைகிறது என மெட்ரோ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைகிறது. இதனிடையே நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் ரூ.61,843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5வது வழித்தடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ வரை 4வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5வது வழிப்பாதை உள்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து
வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ அமைகிறது. அந்த வகையில், மாதவரம் பால்பண்ணை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் ராட்சத இயந்திரங்களுடன் தடுப்புகள் அமைத்து முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் சில இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உயர்மட்டமாகவும் சில பகுதிகளில் பூமிக்கடியில் ரயில் நிலையங்கள் அமைகிறது.
அதிலும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 100 அடிக்கும் கீழ் அமைகிறது என்ற வியக்கத்தக்க வகையில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 5வது வழித்தடத்தில் சிஎம்பிடி முதல் மாதவரம் பால் பண்ணை வரையிலான 10.1 கி.மீ தூரத்திற்கு 16 மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இதற்கான ரயில் நிலைய இருப்பு பாதைகளில் தண்டவாளங்கள் அமைப்பது மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகையான பணிகளும் நடந்து வருகிறது. மேலும் சிஎம்பிடி, அண்ணா நகர் கேவி மெட்ரோ, திருமங்கலம் சந்திப்பு மெட்ரோ, அண்ணாநகர் மேற்கு மெட்ரோ, ரெட்டேரி சந்திப்பு மெட்ரோ, சாஸ்திரி நகர் மெட்ரோ, மாதவரம் பேருந்து முனையம் மெட்ரோ, வேல்முருகன் நகர் மெட்ரோ, மஞ்சம்பாக்கம் மெட்ரோ மற்றும் அசிசி நகர் மெட்ரோ ஆகிய 10 இடங்களில் உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமைகிறது.
அதேபோல், வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை மெட்ரோ, னிவாசா நகர் மெட்ரோ, கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ மற்றும் மாதவரம் பணிமனை மெட்ரோ ஆகிய 5 இடங்களில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களாக அமைகிறது. இந்த நிலையங்கள் வழியாக செல்லும் இடங்களுக்கான 10.1 கி.மீ. நீளத்திற்கு இருப்புப்பாதை மற்றும் இதர பணிகளுக்காக ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.