சென்னை: சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ.) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரித்து வரும் மூத்த முதன்மை விஞ்ஞானி ஞானபாரதி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக கோரி போர்க்கொடி தூக்கியிருக்கிறார். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதவி உயர்வு மற்றும் ஆள் சேர்ப்பு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், பதவி உயர்வு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இடஒதுக்கீடு விதிமுறைகளை பின்பற்றியிருந்தால், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 15 மாற்றுத்திறனாளிகள் விஞ்ஞானிகளாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் 2 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இதுபற்றிய புகாரை புதுடெல்லி மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருக்கு தெரிவித்து இருப்பதாகவும் ஞானபாரதி கூறினார்.