புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கேள்வி கேட்க கவர்னர் யார் என்று டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: யார் இந்த கவர்னர்?. அவர் எங்கிருந்து வந்தார். நமது தலையில் உட்கார்ந்து அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறார். நம் குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? எங்களைத் தடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாளை நாம் ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வரலாம். எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது. இந்த கவர்னர் என் பணிகளை சரிபார்ப்பது, எழுத்துப்பிழைகள், கையெழுத்து பற்றி புகார் செய்வது போல எனது ஆசிரியர்கள் கூட என்னுடைய வீட்டுப்பாடத்தை சரிபார்த்தில்லை. அவர் என் தலைமை ஆசிரியர் இல்லை.
நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். பொதுமக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். நான் அவரிடம் என் அரசு குறித்து கேட்க நீங்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஜனாதிபதி என்னைத் தேர்ந்தெடுத்தார்’ என்றார். அதற்கு நான், ‘ஆங்கிலேயர்கள் வைஸ்ராய்களை தேர்ந்தெடுத்தது போலவா?’ என்றேன். வைஸ்ராய்கள், ‘இந்தியர்களே, உங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது’ என்று கூறுவார்கள். இப்போது நீங்கள் எங்களிடம், ‘டெல்லி வாசிகளே, உங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை’ என்று சொல்கிறீர்கள். மேலும் அவர் என்னிடம் டெல்லி மாநகராட்சி தேர்தலில் 104 இடங்களை பிடிக்க நான்தான் காரணம் என்றார். மேலும் வர இருக்கும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 எம்பி தொகுதிகளையும் பா.ஜ தான் கைப்பற்றும் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.