×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள், விமானம் மூலம் சென்னை திரும்பினர்: அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பினர்

மீனம்பாக்கம்: இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட, நாகப்பட்டினம் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கொழும்பிலிருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தனர். அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள், கடந்த டிசம்பர் 22ம் தேதி அதிகாலையில் 2 படகுகளில், இந்திய கடல் எல்லையில் மீன்கள் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, மீன்கள், மீன்பிடி வலைகளையும் கைப்பற்றி, இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 16 மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து ஒன்றிய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்து, இலங்கை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி சிறையில் இருந்த புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி, இலங்கை நீதிமன்றம், சிறையில் இருந்த 16 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், அந்த 16 மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாததால் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அதோடு இவர்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த பின்பு, இன்று அதிகாலை கொழும்பு நகரிலிருந்து, சென்னைக்கு வரும், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 16 மீனவர்களும் அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 16 பேரையும் வரவேற்று, அரசு வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Navy ,Chennai , Sri Lankan Navy, 16 captured fishermen returned to Chennai by plane, government officials
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்