வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் ஜன.20ம் தேதி தை அமாவாசை வழிபாடு நடக்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு, அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், 2 பிரதோஷங்களுக்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இக்கோயிலில் ஆடி அமாவாசைக்கு அடுத்தபடியாக தை மாத அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு வருகிற ஜன.19ம் தேதி பிரதோஷம், 21ம் தேதி தை அமாவாசை வருகிறது. இதையொட்டி வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, திருவிழாவுக்கு வரும் அரசு பஸ்கள், தற்காலிக பஸ்நிலையத்திற்கு வந்து செல்வதற்கான சாலையின் இருபுறமும் இரண்டு வாகனங்கள் விலகிச் செல்ல விரிவாக்கம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான நிழற்பந்தல்கள், குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறைகள், மின்விளக்கு வசதிகளை அமைக்க பணிகளை தொடங்க வேண்டும்.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு, வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். தாணிப்பாறை விலக்கிலிருந்து தற்காலிக பஸ்நிலையம் மற்றும் வனத்துறை கேட் வரை போதிய மின்விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள், முக்கிய இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். போக்குவரத்தை முறைப்படுத்த போலீசார் நியமிக்க வேண்டும். தை அமாவாசைக்கான சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். போலீசார் மூலம் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் இறங்கி குளிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.