×

கூடுவாஞ்சேரி அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு: 4 பேர் கும்பலுக்கு வலை

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே கூடுவாஞ்சேரி, பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகர் (39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமல், சந்தோஷ்குமார், அருண், கார்த்திக் ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோத தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே என்ஜிஓ காலனி விளையாட்டு திடலில் நேற்று மாலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளின்போது பிரபாகருக்கும் கமல் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வழக்கம் போல் முன்விரோத தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கமல் உள்பட 4 பேர், பிரபாகரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரி வெட்டினர். இதில் பிரபாகருக்கு கழுத்து, முகம், கை, தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திவெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்ததும் கமல், சந்தோஷ்குமார், அருண், கார்த்திக் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிய பிரபாகரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரபாகரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் விசாரித்து, தலைமறைவான கமல் உள்ளிட்ட 4 பேர் கும்பலை தனிப்படை அமைத்து, தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Kooduvancheri , Coduvancheri, hostile dispute, barrage of youth
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...