அண்ணாநகர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை என்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர், துணைத் தலைவர் எம்.டி.தியாகராஜன் ஆகியோர் அறிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘’ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் பணி செய்துவரும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
