சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கடந்த டிசம்பர் 26ம் தேதி வெள்ளனூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே கலெக்டர் கவிதா ராமு மற்றும் எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்வோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தநிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், ஐஜி நிர்மல்குமார் ஜோதி ஆகியோரது தலைமையில் தனிப்படையினர் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.