புதுடெல்லி: உத்தரக்காண்டின் ஜோஷிமத் நகரம் கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. பூமியில் புதைந்ததாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பத்ரிநாத், கேதர்நாத், ஹேமகுந்த் சாகிப் உள்பட புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் ஜோஷிமத் நகரமே பூமியில் புதைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் முதல் கட்ட ஆய்வின் மூலம், கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில், ஜோஷிமத் நகரம் 8.9 செ.மீ. பூமியில் புதைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் ஜோஷிமத் நகரம் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரையிலான 12 நாட்களில், 5.4 செ.மீ. பூமியில் புதைந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.