நெய்வேலி: நெய்வேயில் கொலை செய்யும் நோக்கத்தோடு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 8 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2020ம் ஆண்டு வட்டம் -21 பகுதியை சேர்ந்த சிவா தலைமையில் ஒரு கோஷ்டிம், மகேஷ் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வந்தது. பொது இடத்தில் அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சிவா கொலை செய்யப்பட்டார். அடுத்ததாக சிவாவின் தந்தை வீரமணியை விட்டு வைத்தால், சிக்கலாகும் என்பதால் மகேஷ் தரப்பினர் அவரையும் கொலை செய்தனர்.
இந்த இரண்டு கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட மகேஷ் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். மகேசை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டுமென வீரமணி மற்றும் சிவா ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இதனால் இரு கோஷ்டியினரும் ஆயுதங்களுடன் சுற்றி வருவதால் டெல்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், நெய்வேலி தெர்மல் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று நடத்திய ரோந்து பணியில், வட்டம் 21 பூங்கா அருகில் பதுங்கியிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 3 விவேகானந்தர் சாலையை சேர்ந்த அகிலன்(22), மற்றொருவர் வட்டம் 21 பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டதும், இதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நெய்வேலி வட்டம்-4 தைலதோப்பில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பாதுகாப்பாக கைப்பற்றி வெடிக்க செய்து செயலிழக்க வைத்தனர். அகிலனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.