சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற பல்வேறு தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் இரண்டு நாட்களாக ஒன்றிய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். இதற்கான ஓப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவோஸ்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் இவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த இசட் பிரிவு பாதுகாப்பானது அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். இசட் பிரிவில் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பயன்படுத்தப்படும். இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் தனிப்படைக்கு மாதம் ரூ.16 லட்சம் செலவாகும். அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.