×

சிவகாசியில் தைப்பொங்கலை முன்னிட்டு கரும்பு விற்பனை களைகட்டியது: பனங்கிழங்கும் பறக்குது: வியாபாரிகள் மகிழ்ச்சி

சிவகாசி: சிவகாசியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது. கட்டு, கட்டாக விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, கதிரவனுக்கு படையலிட்டு மக்கள் கொண்டாடுவர். பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள்கொத்தும்தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்புவது கரும்பைதான். தைப்பொங்கல் திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கொத்து விற்பனை சூடுபிடித்துள்ளது.

மதுரையிலிருந்து வரும் கரும்புகள்:
மதுரை மாவட்டம், மேலூர், சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளிலிருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்துள்ளன. சிவகாசியில் சிவன்கோயில் சந்து, மார்க்கெட் பகுதி, பைபாஸ் பகுதி, பஸ் ஸ்டாண்டு, மாரியம்மன்கோயில் பகுதி, திருத்தங்கல் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. கரும்புகளை பொதுமக்கள் நேற்று முதலே மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.450ல் முதல் 550 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகின்றது. மதுரை மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கரும்புகள் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

கட்டு ரூ.450 முதல் 550 வரை விற்பனை:
இதுகுறித்து கரும்பு வியாபாரி முனியசாமி கூறுகையில், கடந்த ஆண்டு கட்டு ரூ.350 முதல் 500வரை திற்கு விற்பனை செய்தோம். இந்த ஆண்டு கட்டு ஒன்று உள்ளூர் கரும்பு ரூ.450திற்கும் மதுரை பகுதி கரும்புகள் ரூ550க்கும் விற்பனை செய்து வருகின்றோம். கடைசி நாளில் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரும்புகளை பொதுமக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்’ என்றார். இதே போன்று பனங்கிழங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. திருவில்லிபுத்தூர் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பனங்கிழங்குள் 15 பனங்கிழக்கு கொண்ட ஒரு கட்டு ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன.

Tags : Sivakasi , Sugarcane sale booms ahead of Thai Pongal in Sivakasi: Panangijangamum flies: Traders happy
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து